கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த வாரம் வரை போத்தனூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். பின்னர் சமீபத்தில் தான் இப்பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளனர். குடும்பத்தலைவர் அப்பகுதியில் உள்ள லேத் ஒர்க்ஷாப் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவர்களது 10 வயது மகள், போத்தனூர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு நான்காம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அங்கிருந்து மாற்றுச் சான்றிதழ் (TC) பெற்று வந்த பெற்றோர், அவரை இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பில் சேர்ப்பதற்காகக் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற வாலிபர் இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் அச்சிறுமி அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.
ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது, சிறுமியை அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றதாகக் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.இந்நிலையில், இன்று காலை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரை ஓரத்தில் சிறுமி மர்மமான முறையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் உறைந்து போயினர்.
உடனடியாக இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு (GH) அனுப்பி வைத்தனர்.சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து ? கொலை செய்தனரா ?
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகச் சூலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரே, இந்த படுபாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கார்த்திக் என்ற 33 வயது கொடூரனை போலீசார் கைது செய்த நிலையில், உதவியாக இருந்ததாக மோகன் ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கோவையில் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கி உள்ள இந்தச் சிறுமியின் படுகொலைச் சம்பவத்தால், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து வேண்டும் எனப் பொதுமக்கள் கண்ணம்பாளையம் பகுதியில் கூடி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுப் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கோவை சிறுமி கொலை குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சம்பத் குமார் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது போன்ற செயல்களில் ஈடுபட அஞ்சும் வகையில் உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை துரிதமாக செயல்பட்டு இருவரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு நிவாரணம் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

