கோவை, கோவில்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கல்லூரி விடுதி அறையில், பி.டி.இக் (B.Tech) இறுதி ஆண்டு படித்து வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு, கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரகு. விவசாயியான இவரது மகள் மகாலட்சுமி (21). இவர் கோவை விலாங்குறிச்சி பகுதியில் உள்ள பி.பி.ஜி. (PPG College) பொறியியல் கல்லூரியில் B.Tech IT தகவல் தொழில்நுட்பம் இறுதி ஆண்டு படித்து வந்தார். இதற்காகக் கல்லூரி வளாகத்தில் உள்ள டெக் கேம்பஸ் மாணவிகள் விடுதியின் 3-வது தளத்தில் உள்ள 425 எண் கொண்ட அறையில் தங்கிப் படித்து வந்து உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 11:20 மணி முதல் மதியம் 12:30 மணி இடைப்பட்ட நேரத்திற்குள், மாணவி மகாலட்சுமி தான் தங்கி இருந்த விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
விடுதி அறை நீண்ட நேரமாகப் பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து சக மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்த போது, மகாலட்சுமி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து உடனடியாகக் கருமத்தம்பட்டி உட்கோட்ட கோவில்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேம்பாலத்தில் தொங்கிய இளைஞர்.. என்ன நடந்தது? முழு விவரங்கள்..!
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் காவல் துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக மாணவியின் உடல் கோவை, சிங்கநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறுதி ஆண்டு படித்து வந்த தங்களது மகள் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட தகவல் நீலகிரியில் உள்ள அவரது பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது.
மகளின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் கதறியபடி கோவைக்கு விரைந்து உள்ளனர்.
மாணவி மகாலட்சுமி எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் ? கல்லூரி அல்லது விடுதியில் ஏதேனும் மன உளைச்சல் காரணமா ? அல்லது குடும்பப் பிரச்சினையா ? என்ற கோணங்களில் கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் அடுத்தடுத்து கல்லூரி விடுதிகளில் மாணவிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

