பெண் நிர்வாகியின் ஆடையை கிழித்து தகாத வார்த்தைகளால் பேச்சு – சூலூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நடந்த மோதலால் அதிர்ச்சி.கோவை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் தலைமையில் கணியூர் பகுதியில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்கச் சென்ற அக்கட்சியின் ஊராட்சி செயலாளர் வசந்தியை அக்கட்சி நிர்வாகிகளே தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கி ஆடையை கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, வசந்தியை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராகப் பணியாற்றி தேர்தலிலும் பணியாற்றிய பெண் நிர்வாகியை அக்கட்சியினரே எம்.எல்.ஏ முன்னிலையில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குடிநீரில் ஆசிட்டா?.. குடித்த பெண்ணின் உடல்நிலை மோசம்; சீல் வைக்கப்பட்ட பாட்டில்களிலும் ஆபத்து..!
இது குறித்து, பேசிய தவெக நிர்வாகி வசந்தி கூறும் போது : தவெக-வில் கடந்த இரண்டு வருடங்களாகத் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும், தேர்தல் சமயங்களில் கட்சி அறிவித்த நபர்களுக்காக 25 நாட்களுக்கும் மேலாக இரவும் பகலும் பாராமல் தீவிரப் பிரசாரம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தங்களது பகுதிக்கு வருகை தந்த எம்.எல்.ஏ மரியாதை நிமித்தமாக மாலை அணிவிக்கச் சென்றபோது, மற்றொரு பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரைத் தடுத்துள்ளனர்.
நீங்கள் எங்கள் அணியைச் சேர்ந்தவர் இல்லை, எங்களது அணியினர் மட்டுமே மாலை அணிவிக்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், வடக்கு ஒன்றியச் செயலாளர் அஸ்வின் மற்றும் செந்தில் ஆகியோர் தன்னை வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளியதாகவும், கழுத்தை நெரித்துத் தாக்கியதாகவும் கூறியுள்ளார். இந்த மோதலில் தனது ஆடை கிழிக்கப்பட்டதோடு, ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் புதிதாக அணி அமைத்து ஓரம்கட்டுவதாகவும் தெரிவித்தார்.தாக்குதலுக்குள்ளான பெண் நிர்வாகி வசந்திக்குக் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாலும், ஆடை கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மயக்க நிலை காரணமாகவும் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
கட்சிக்காக உழைத்த பெண் நிர்வாகி என்றும் பாராமல் தடித்த வார்த்தைகளால் பேசி, ஆடை கிழிபடும் அளவுக்குத் தாக்கிய உட்கட்சி நிர்வாகிகள் மீது தவெக தலைமை மற்றும் அதன் தலைவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் உள்ளூர் தவெக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

