கோவை, மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில், தனியார் மாம்பழத் தோட்டம் ஒன்றில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே பெரும் ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்தி உள்ளது.
யானையின் தும்பிக்கை கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதியில் உள்ள மின் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது. போளுவாம்பட்டி பிளாக்–I காப்பு வன எல்லைக்கு அருகில் உள்ள வென்னல் பெருமாள் கோவில் சரக மாந் தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் யானை கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!
சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், யானையின் தும்பிக்கையில் பலத்த தீக்காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அங்கு உள்ள உயரழுத்த (HT) மின்மாற்றி அல்லது தாழ்வாகச் சென்ற மின்கம்பியை யானை தொட்ட போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்து உள்ளது.இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மாந்தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்மாற்றியில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததா ? அல்லது விதிகளை மீறி மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டதா ?என்பது குறித்து விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. ஒருவேளை மின்வாரியத்தின் அலட்சியமோ ? அல்லது தோட்ட உரிமையாளரின் விதிமுறை மீறலோ ?உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் ‘அதிரடி’ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.யானைகள் தங்களின் பாரம்பரிய வழித் தடங்களில் உணவு தேடி நகர்வது இயல்பு.
ஆனால், மனிதர்கள் அமைக்கும் பாதுகாப்பற்ற மின்வேலிகளும், தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகளும் யானைகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளன.கோவையில் மீண்டும் ஒரு யானை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம், வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலங்களில் மின்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தி உள்ளது.

