ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கலாம் என்பதை யோசித்து பெரிய குழப்பத்தில் இல்லத்தரசிகள் இருப்பார்கள். அதுவும் மதிய வேளையில் தான் முடிவெடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில், காரமாக சாப்பிட பிடிக்காது. அடிக்கிற வெயிலுக்கு சாப்பிடவே தோன்றாது. அப்படியே சாப்பிட தோன்றினாலும் காரசாரமாக இல்லாமல் சாப்பிட நினைப்போம்.
அந்த வகையில், கோடையில் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. அதுவும் வாழைத்தண்டை வெறுமனே பொரியல் மட்டும் செய்து சாப்பிடாமல் அத்துடன் மோர் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். உடல் சூட்டையும் தணிக்கும். எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
மசாலா அரைப்பதற்கு,
- நாலு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
- 3 பச்சை மிளகாய்
- ஒரு டீஸ்பூன் சீரகம்
- சிறிது தண்ணீர்
தாளிப்பதற்கு,
- ஒன்றை டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ஒரு டீஸ்பூன் கடுகு
- கால் டீஸ்பூன் வெந்தயம்
- இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள்
- நான்கிலிருந்து ஐந்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
- நான்கு வர மிளகாய்
- இரண்டு கொத்து கருவேப்பிலை
- இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள்
- 250 கிராம் நறுக்கிய வாழைத்தண்டு
- சிறிது தண்ணீர்
- சுவைக்கேற்ப உப்பு
- அரைத்த தேங்காய் மசாலா
- ஒரு கப் மோர்
செய்முறை
Step 1: முதலில் வாழைத்தண்டை நன்றாக பொடி பொடியாக நறுக்கி நீரில் போட்டு வைக்க வேண்டும். பின்னர், மிக்ஸர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
Step 2: பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து அத்துடன் நான்கு வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
5 பச்சை மிளகாய் இருந்தா போதும்: அசத்தலான சட்னி தயார்..!
Step 3: அதில், மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர், அதில் சிறிது நீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.
Step 4: அதனுடன் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மூடி வைத்து வேக வைக்க வேண்டும். மூன்று நிமிடம் கழித்து மூடியை திறந்து கிளறி இறக்கி ஐந்து நிமிடம் குளிர வைக்க வேண்டும். இறுதியாக அதில் ஒரு கப் மோரை சேர்த்து கிளறினால் சுவையான வாழைத்தண்டு மோர் கூட்டு ரெடி.

