தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு, மஞ்சக்குப்பம், வடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்திருந்தது. அப்படி இருக்கையில், தற்போது விஜய் தனது பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளாராம்.

இதற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தரப்பிலிருந்து புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தது என்றும், அதனால் தான் விஜய் தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் தரப்பிலிருந்து புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற்றாலும் கடலூருக்கு விஜய் செல்ல புதுச்சேரி வழியாக இல்லாமல் மாற்று வழியில் செல்ல அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, திண்டிவனம் வழியாக விக்கிரவாண்டிக்கு சென்று அங்கிருந்து கடலூருக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாம். அப்படி இருக்கையில், விஜய் தரப்பில் தான் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இன்னும் தேர்தலுக்கு 13 நாட்களை உள்ளநிலையில், விஜய் தனது பிரச்சாரத்தை ரத்து செய்ததால், அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

விஜய் இதற்கு முன்னர் சென்னையில் அவரது பிரச்சாரத்தை ரத்து செய்திருந்தார். அதற்கு நேர கட்டுப்பாடு தான் காரணம் என்று அவரது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல், பிரச்சாரத்தை ரத்து செய்தார் என்று தகவல் மட்டும் தெரிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் சிலர் இதற்கு காரணம் திமுகவும் தேர்தல் ஆணையமும் திமுகவுக்கு சாதகமான அரசு அதிகாரிகளும் தான் என்று பேசி வருகின்றனர்.

