கோவையில் நீட் தேர்வு தொடர்பான மன அழுத்தம் காரணமாக, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த 19 வயது மாணவி ஒருவர் உறவினர்களுக்கு உருக்கமான வாட்ஸ்-அப் செய்தி அனுப்பிவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளான அனுகீர்த்தனா, எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பை சிறப்பாக முடித்திருந்தார்.சிறு வயதிலிருந்தே மருத்துவராகி ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இருந்த அனுகீர்த்தனா, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக தீவிரமாக தயாராகி தேர்வும் எழுதியிருந்தார்.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு குறித்த சர்ச்சைகள் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.இந்த சூழல் மாணவியை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டால் தன்னால் விரும்பிய மதிப்பெண்களை பெற முடியுமா என்ற அச்சமும், தனது நீட் பயிற்சிக்காக தந்தை லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பதும் அவரை மனரீதியாக பாதித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை தனது சித்தப்பா மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் நீண்ட உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர காத்திருந்தேன். தற்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு பயமாக இருக்கிறது. எனக்காக தந்தை அதிகம் செலவு செய்துள்ளார். அவருடைய முகத்தை இனிமேல் எப்படி பார்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை” என தனது மனவேதனையை வெளிப்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!
அந்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்து சென்றனர். அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அனுகீர்த்தனா விஷம் அருந்திய நிலையில் மயக்கத்துடன் கிடந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவியின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் அனுப்பிய வாட்ஸ்-அப் செய்திகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் பத்மநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய மாணவி, மீண்டும் தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டதால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார். வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு தொடர்பான குழப்பங்கள் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் போராடிய மாணவியின் உயிரிழப்பு, அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் கல்வி வட்டாரங்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

