சிறுவர்கள் விளையாடிய பந்து வீட்டுச் சுவரில் பட்டதால் ஏற்பட்ட தகராறில், பெண்ணை தாக்கி தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றதாகவும், குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரளித்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பாதிக்கபப்ட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த அப்பாஸ் தனது குடும்பத்தினருடன் கடந்த 14 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி அவர் வேலைக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் அவரது மனைவி, மகன்கள் மற்றும் மாமியார் மும்தாஜ் ஆகியோர் இருந்துள்ளனர். மாலை சுமார் 4.30 மணியளவில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் விளையாடிய பந்து எதிர்தரப்பை சேர்ந்த மதீனா என்பவரின் வீட்டுச் சுவரில் பட்டதாக கூறப்படுகிறது.
பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!
இதனால் ஆத்திரமடைந்த மதீனா, குழந்தைகளையும் மும்தாஜையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தைகள் முன்னிலையில் அவ்வாறு பேச வேண்டாம் என மும்தாஜ் கூறிவிட்டு, குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர், மதீனாவின் தம்பி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டின் முன்பு வந்து தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், மும்தாஜை தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் மும்தாஜின் கழுத்தின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், இதுவரை தங்க ஆபரணங்கள் மீட்கப்படவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளனர். புகார் அளித்தால் குடும்பத்துடன் அப்பகுதியை விட்டு காலி செய்ய வைப்பதாகவும், வீட்டை எரித்து விடுவதாகவும் எதிர்தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காணாமல் போன தங்க ஆபரணங்களை மீட்டு வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக புகார் அளித்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் தங்களை மிரட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

