சென்னையில் இருந்து வேலை தேடி கோவைக்கு வந்து நண்பர்களுடன் தங்கியிருந்த இளைஞர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்்ந்தவர் நவீன்(24). இவர், கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டப்படிப்பு படித்து முடித்தார். கோவை பீளமேடு அருகேயுள்ள, உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அசோக் நகரில் நவீனின் நண்பர்கள் சிலர் அறை எடுத்து தங்கி வசிக்கின்றனர். நவீன் சென்னையில் இருந்து கோவைக்கு வரும் போது எல்லாம், மேற்கண்ட பகுதியில் உள்ள நண்பர்கள் அறையில் தங்குவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நவீன் சென்னையில் இருந்து வேலை தேடி கோவைக்கு வந்தார். வழக்கம் போல், அசோக்நகரில் உள்ள நண்பர்களின் அறைக்குச் சென்று தங்கி வேலை தேடி வந்தார்.இதே அசோக் நகரின் மற்றொரு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இங்குள்ள வீதியில் நவீனின் நண்பர்கள் இருசக்கர வாகனங்களில் அடிக்கடி வேகமாக செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அதேபோல், நவீனின் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர்.
இதையடுத்து சந்தோஷ் வேகமாக சென்ற அவர்களை பிடித்து அறைந்து, எச்சரித்துள்ளார். இதை அவர்கள் நவீனிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் வீட்டுக்குச் செல்லும் போது, அவரை நவீன் மற்றும் அவரது நண்பர்கள் பிடித்து தங்களது அறைக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தன் நண்பர்களுக்கு போன் செய்து, தன்னை தாக்கிய தகவலை தெரிவித்து அவர்களை நவீன் தங்கியிருந்த அறைக்கு வரவழைத்தார்.
கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!
அங்கு சந்தோஷ், விக்னேஷ் உட்பட 9 பேர் ஒன்று சேர்ந்து நவீன் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். மேலும், தங்களிடம் இருந்த கத்தியால் நவீனின் நெஞ்சி்ல் குத்திவிட்டு தப்பியோடினர். கத்திக்குத்தில் காயமடைந்த நவீன், அந்த வீட்டிலிருந்து வெளியேறி தள்ளாடியபடியே நடந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு விழுந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். தொடர்ந்து உயிரிழந்த நவீனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக பீளமேடு போலீஸார் கூறும்போது, ‘‘கொலை சம்பவம் தொடர்பாக அசோக் நகரைச் சேர்ந்த சந்தோஷ், விக்னேஷ் உள்ளி்ட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்’’என்றனர்.

