கோவை மாவட்டம் சூலூர் அவிநாசி சாலை அரசூர் பகுதியில் உள்ள இடுகாட்டில் இருந்து, நள்ளிரவில் எந்தவித முன்னனுமதியும் இன்றி குப்பைகளை அள்ளிச் செல்ல முயன்ற நான்கு லாரிகளைப் பொதுமக்களும் பாரதிய ஜனதா கட்சியினரும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் அவிநாசி சாலை அரசூர் பிரபல மருத்துவமனைக்கு எதிர்ப்புறமாக, அரசூர் ஊராட்சிக்குச் சொந்தமான இடுகாடு ஒன்று அமைந்துள்ளது. இந்த இடுகாட்டில் அரசூர் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த இடுகாட்டில் குப்பைகள் மலைபோலத் தேங்கி நின்று, அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.
நீங்க டிஜிட்டல் கைதில் இருக்கீங்க.. மும்பை சிபிஐ அதிகாரி என்று கூறி அதிரடி மிரட்டல்..!
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, இந்த இடுகாட்டில் இருந்த குப்பைகளை அன்னூர் அருகே கொட்டுவதற்காக எவ்வித அனுமதியும் இன்றி லாரிகளில் எடுத்துச் சென்றுள்ளனர். இதனை அறிந்த அன்னூர் பகுதி மக்கள் அப்போது குப்பை லாரிகளைத் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதியின்றி இங்கிருந்து குப்பைகளை எடுத்துச் செல்லக்கூடாது என கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இன்று இரவு எந்தவிதமான முன் அனுமதியும் இன்றி, இந்த இடுகாட்டில் தேங்கியிருந்த குப்பைகளை அள்ளிச் செல்வதற்காக நான்கு லாரிகள் வந்துள்ளன.
நள்ளிரவில் லாரிகள் குப்பைகளை அள்ளுவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக லாரிகளைத் தடுத்து நிறுத்திச் சிறைபிடித்தனர்.இது குறித்து நீலாம்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த குப்பைகள் இங்கிருந்து எங்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்ற விபரம் லாரி ஓட்டுநர்களுக்கே தெரியாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, சிறைபிடிக்கப்பட்ட நான்கு லாரிகளையும் காவல்துறையினர் நீலாம்பூர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசூர் இடுகாட்டில் தேங்கியுள்ள குப்பைகளை முழுமையாக அகற்றி, இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்குச் சொந்தமான இந்த இடுகாட்டிற்குச் செல்லும் வழியை எவ்வித இடையூறும் இன்றி சீரமைத்துத் தர வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ விற்கும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

