பொதுவாக கோடை காலம் வந்து விட்டாலே வரும் அறிவுரை நிறைய தண்ணீர் குடிங்க என்றுதான் பலரும் கூறுவார்கள். ஆனால், கோடை காலத்தில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவதும் ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறது பல ஆய்வு முடிவுகள்.
தண்ணீருடன் மோர், ஒஆர்எஸ் கரைசலை அருந்தினால் தான் ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் அளவை ஈடு செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர். கோடையில், அதிகமாக நீர்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது.

இதனை ஈடுகட்ட தண்ணீரை மட்டும் அதிகமாக அருந்தினால் போதும் என பலரும் நினைத்து வருகிறோம். அது முற்றிலும் தவறானது. ஏனெனில், நமது உடலில் இருந்து வியர்வை வெளியேறும் போது நீர் சத்து மட்டும் குறைவதில்லை மாறாக சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் வெளியேறுகின்றன. அந்த தருணத்தில் தண்ணீரை அதிகமாக குடிக்கும் போது ரத்தத்தில் இருக்கக்கூடிய சோடியம் அளவு மேலும் குறைந்து ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது.

அதிகப்படியான நீரால் ரத்தத்தில் உள்ள உப்பு மற்றும் சோடியத்தின் அளவு மிக வேகமாக நீர்த்துப் போகிறது. இந்த நிலைக்கு மருத்துவ அறிவியல் மொழியில் ஹைபோநெட்ரீமியா (Hyponatremia) என்று பெயர். வெப்பமண்டல நாடுகளில் கோடை காலங்களில் குழந்தைகள் முதியவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகரிப்பதாக ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக, இதனுடைய பாதிப்பு குமட்டல், தலைவலி, தலைசுற்றல், பிதற்றல் நிலை ஆகியவை அதற்கான அறிகுறிகள் ஆகும். அலட்சியத்தினால் மூலை வீக்கம் அடைந்து நினைவிலக்கம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கின்றனர். இதை தவிர்க்க தண்ணீரை ஒரே நேரத்தில் அதிகமாக குடிப்பதற்கு பதிலாக இடைவெளி விட்டு காலை முதல் மாலை வரை சீராக அருந்த வேண்டும்.

அதனுடன் உப்பு கலந்த மோர், கூல், உப்பு சக்கரை கரைசல் போன்றவற்றை அருந்தலாம். கோடை காலம் முடியும் வரை பகல் 12 முதல் மாலை 4 மணி வரை நேரடியாக வெயிலில் பணியாற்றுவதை தவிர்க்கலாம். இயலாத பட்சத்தில் தண்ணீருடன் உப்பு கலந்த பானங்களை அருந்தி ரத்தத்தில் சோடியத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.
வெயில் கொடுமைக்கு வெந்தயம் பெஸ்ட் சாய்ஸா?.. தப்பி தவறியும் இதை மட்டும் பண்ணிடாதீங்க..!

நம் உடலில் உள்ள சிறுநீரகங்கள் தான் ரத்தத்தை வடிகட்டி, தேவையில்லாத கழிவுகளையும் உபரி நீரையும் சிறுநீராக வெளியேற்றுகின்றன. ஒரு ஆரோக்கியமான சிறுநீரகத்தால் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 0.8 முதல் 1 லிட்டர் வரையிலான தண்ணீரை மட்டுமே வடிகட்ட முடியும். நாம் குறுகிய நேரத்தில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிக்கும் போது, சிறுநீரகங்கள் ஓய்வில்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, அவற்றின் வடிகட்டும் திறன் பாதிக்கப்படலாம்.

ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!
ஏற்கனவே சிறுநீரகக் கோளாறு (Kidney Chronic Disease), இதயப் பாதிப்பு அல்லது கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவை விட ஒரு அவுன்ஸ் தண்ணீர் கூட அதிகமாகக் குடிக்கக் கூடாது. ஏனெனில், இவர்களது சிறுநீரகங்களால் தண்ணீரைச் சரியாக வெளியேற்ற முடியாது. நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவு சரியானது தானா என்பதை உங்கள் சிறுநீரின் நிறத்தைக் கொண்டே அறியலாம். சிறுநீர் வெளிர் மஞ்சள் (Pale Yellow) அல்லது நிறமற்று (Clear) இருந்தால் உங்கள் உடலில் போதிய தண்ணீர் உள்ளது என்று அர்த்தம்.

தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியம் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி, குறுகிய நேரத்தில் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பதே சிறுநீரகத்திற்கு நல்லது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

