கையில் விளக்கேந்தி போராட்டம் ; நூற்றுக் கணக்கானோர் திரண்டு முழக்கம். இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரியும், தமிழக அரசை வலியுறுத்தியும், மேலும் 10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தும் கோவை காந்தி பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக நேரில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளிலும், ஆன்மீக மரபுகளிலும் தமிழக அரசு தேவையின்றித் தலையிடுவதாகக் குற்றம் சாட்டினார்.
மாஸ் திருவிழா.. அழகு போட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த நாட்டு நாய்கள்..!
குறிப்பாக, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய முறைப்படி தீபம் ஏற்றுவதற்கு எவ்விதத் தடையுமின்றி அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மட்டுமன்றி, தமிழகத்தில் நிலவும் பல்வேறு உள்கட்டமைப்பு பிரச்சினைகள், ஆன்மீகக் கோரிக்கைகள் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துத் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், மகளிர் அணியைச் சேர்ந்த தாய்மார்கள் என 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

