ரேஷன் அரிசியைப் பயன்படுத்தி, அதன் பிரத்யேக வாசனை ஏதுமின்றி, பிரியாணி சுவையில் உதிரி உதிரியாக குக்கரில் தக்காளி சாதம் எப்படிச் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- 2 கப் ரேஷன் பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி
- 4 (பெரியது, பொடியாக நறுக்கியது) தக்காளி
- 2 (நீளவாக்கில் நறுக்கியது) பெரிய வெங்காயம்
- 2 (கீறியது) பச்சை மிளகாய்
- 1 ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ஒரு கைப்பிடி அளவு புதினா, கொத்தமல்லி
- 2 ஸ்பூன் கெட்டித் தயிர்
- தலா 2 ஸ்பூன் எண்ணெய் + நெய்
- தலா 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- ½ ஸ்பூன் சோம்பு
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் (நல்ல நிறத்திற்கு) காஷ்மீரி மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- தேவையான அளவு உப்பு
செய்முறை
Step 1: ரேஷன் அரிசியை சமைப்பதற்கு முன் 3 முதல் 4 முறை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். கழுவிய பின், அரிசியில் அரை எலுமிச்சம்பழச் சாறு மற்றும் ஒரு சிட்டிகை கல்லுப்பு சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்தால், அரிசியின் நிறம் வெள்ளையாக மாறுவதுடன் அதன் வாசனையும் முற்றிலும் நீங்கிவிடும்.
லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!
Step 2: குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை சேர்த்துப் பொரிய விடவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
Step 3: வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இப்போது புதினா மற்றும் கொத்தமல்லித் தழையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
Step 4: அடுத்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி குழைந்து தொக்கு பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்குவது தான் இதன் சுவைக்கு முக்கியம். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
Step 5: மசாலாக்கள் கருகாமல் இருக்க 2 ஸ்பூன் கெட்டித் தயிர் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும். ரேஷன் அரிசிக்கு பொதுவாக 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற வீதத்தில் அளந்து ஊற்றவும். தண்ணீர் நன்கு கொதித்து வரும்போது, ஊற வைத்துள்ள ரேஷன் அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறி விடவும். இந்த நேரத்தில் உப்பின் அளவைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
Step 6: அரிசியும் தண்ணீரும் சமமாக வெந்து வரும் போது, குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் விடவும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, சாதம் உடையாதவாறு ஓரங்களில் இருந்து மெதுவாகக் கிளறி, மேலே சிறிதளவு கொத்தமல்லித் தழை தூவினால் கமகமக்கும் ரேஷன் அரிசி தக்காளி சாதம் ரெடி. இதனை சுடச்சுட வெங்காயத் தயிர் பச்சடி அல்லது உருளைக்கிழங்கு வறுவலுடன் பரிமாறினால் மிக அருமையாக இருக்கும்.

