தமிழகம் முழுவதும் கோடை வெயில் ‘சதமடித்து’ வாட்டி வதைத்து வரும் நிலையில், கோவையின் இயற்கை சொர்க்கமான கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை இன்று அதிகரித்து உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் தாறுமாறாக உயர்ந்து உள்ளதால், அதில் இருந்து தப்பிக்கவும், விடுமுறையை ஜாலியாகக் கழிக்கவும் மக்கள் அருவிகளை நோக்கி ‘படையெடுத்து’ வருகின்றனர்.
2 மாதங்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை.. மூவர் கைது, முக்கிய குற்றவாளிகள் மாயம் – பின்னணி என்ன?
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள சாடிவயல் சோதனைச் சாவடியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்ததைக் காண முடிந்தது. கோவை குற்றாலம் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில், கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
அருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குடும்பம், குடும்பமாக மக்கள் குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர்வீழ்ச்சியில் குளித்த குழந்தைகள், தண்ணீரில் ஆட்டம் போட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால், வனத் துறையினர் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அருவிக்குச் செல்லும் வழியில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், அருவிப் பகுதியில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் தவிர்க்கவும் வனப் பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
கோடை விடுமுறை இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என்பதால், வரும் நாட்களில் கோவை குற்றாலத்தில் கூட்ட நெரிசல் மேலும் அதிகரிக்கும் என ‘எதிர்பார்க்கப்படுகிறது’.

