டைப் 1 சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து களப்பணியாற்றி வரும் இதயங்கள் அறக்கட்டளையின் 9வது ஆண்டு விழா, கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன், கடந்த ஒன்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சேவைகள், அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பேசுகையில்,
டைப் 1 சர்க்கரை நோயால் உயிரிழப்பு அபாயத்தில் இருந்த குழந்தைகள் கூட, சரியான மற்றும் நேர்மையான சிகிச்சையால் இன்று பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை தொடர்ந்து வருகின்றனர். சிலர் தன்னம்பிக்கையுடன் வேலை செய்து வருமானமும் ஈட்ட ஆரம்பித்துள்ளனர்.
35 மாவட்டங்கள்.. 700 வீரர்கள்.. தேசிய சாம்பியன்ஷிப் வாய்ப்பு யாருக்கு?..
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 4000- க்கும் அதிகமான குழந்தைகளை பராமரித்து வருகிறோம். உயர்தர இன்சுலின் , சர்க்கரை பார்க்கும் சாதனம், குளுக்கோஸ் ஸ்ட்ரிப்ஸ் மற்றும் இன்சுலின் பம்ப் போன்ற அதிநவீன மருத்துவம் அனைத்து ஏழை குழந்தைகளுக்கும் கிடைக்கிறது.
இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நோக்கில், தமிழகத்தில் 38 மாவட்டங்களில் எங்கள் சேவை தொடர்கிறது. தற்போது 10 மாவட்டங்களில் சர்க்கரை நோய் சிகிச்சை மையங்களை செயல்படுத்தி வருகிறோம். மேலும், வரும் ஆண்டில் மதுரை, சேலம், கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த மையங்களில் உள்ள உயர்தர மருத்துவ கருவிகளின் உதவியால், ஒரு சொட்டு ரத்தத்திலேயே கிட்னி, தைராய்டு, ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை முடிவுகளை விரைவாக அறிய முடிகிறது, என்றார்.
விழாவின் ஒரு பகுதியாக, டைப் 1 சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வெற்றிகரமாக முன்னேறி வரும் குழந்தைகள், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து மீண்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

