கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம் வனப்பகுதியில், பிறந்து சில மாதங்களே ஆன ஒரு குட்டி யானை ஒன்று தாய் யானையிடம் இருந்து பிரிந்து வனப்பகுதி சாலையோரம் சுற்றித் திரிவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிங்காபுரம் – காந்தையூர் செல்லும் சாலையின் ஓரங்களில் அலைந்து திரியும் இந்த குட்டி யானை, தாயை தேடி தவிப்புடன் சுற்றித் திரிவதோடு, அருகிலுள்ள மக்களிடம் பயமின்றி சென்று விளையாட முயற்சிப்பதும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மனவேதனையுடன் அதைப் பார்த்து பரிதாபப்பட்டனர்.
இந்நிலையில், சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குட்டி யானையை அதன் தாய் யானையுடன் மீண்டும் சேர்க்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். யானைக் கூட்டம் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தாய் யானையின் இருப்பிடத்தை கண்டறிந்து குட்டியை பாதுகாப்பாக சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.
பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!
மேலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், “குட்டி யானை தாயுடன் விரைவில் இணைந்தால் தான் நிம்மதி” எனக் கூறி வனத்துறையின் முயற்சி வெற்றியடைய வேண்டும் என எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில், வனத்துறையினர், டிரோன்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் தாய் யானையின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, குட்டி யானையைப் பாதுகாப்பாக அதன் தாயுடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர்.
வன விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான பிணைப்பைக் காட்டும் விதமாக இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

