சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல நாளை தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அத்துடன் தேர்தலில் 100% வாக்குப் பதிவை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் 3,563 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நேரில் சென்று வாக்களிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. அது போன்று வாக்குப் பதிவின் போது பிரச்சனை நடப்பதை தடுக்க உள்ளூர் போலீசார் உடன் இணைந்து துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நாளை வாக்குச்சாவடிகளுக்கு சென்று பொதுமக்கள் ஓட்டு போட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு இடையே தேர்தலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது போன்று பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறும் போது
சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் நாளை வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் அருவி மூடப்படுகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை, அதே போன்று வெள்ளியங்கிரி மலைக்கு இன்று புதன்கிழமை மாலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை செல்ல அனுமதி இல்லை
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கம் போல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாம்.
இந்த உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த தடை மீறி கோவை குற்றாலம் அருவிக்கும், வெள்ளியங்கிரி மலைக்கும் செல்வதை தடுக்க வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!
தடையை மீறும் நபர்கள் மீது இந்திய வனச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அத்துடன் தடை செய்யப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல முயற்சி செய்ய வேண்டாம். அதுபோன்று கோவை குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

