கோவை தடாகம் காவல் எல்லைக்கு உட்பட்ட சோமையனூர் பகுதியில் குடிபோதையில் இருந்த கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தள்ளிவிட்டதில் கணவர் உயிரிழந்தார். இது தொடர்பாக தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சோமையனூர் பகுதியில் குடியிருந்து வருபவர் கார்த்திக் இவரது மனைவி ரேவதி, பெயிண்டராக உள்ள கார்த்திக் மற்றும் ரேவதி ஆகியோருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
மனைவி ரேவதி சாய்பாபா காலனி பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.இறந்து போன கார்த்திக் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து சண்டை போட்டு வந்துள்ளார்.
மனநல பாதிப்பா? திட்டமிட்ட சதியா?.. பெண்களை மிரட்டிய சைக்கோ ஆசாமி கைது..!
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த கார்த்திக், மீண்டும் மனைவி ரேவதியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளார். அப்போது மனைவி தன்னை பாதுகாத்துக்கொள்ள முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் கார்த்திக் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் அவரது பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது சம்பந்தமாக தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா வழக்குப் பதிவு செய்து மனைவி ரேவதியிடம் விசாரித்து வருகிறார்.

