கோவை மாநகரில் தனியாகச் செல்லும் பெண்களைக் குறி வைத்தும், வீடுகளின் பின்புறம் நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்தி வந்த ஆசாமி ஒருவரை, கவுண்டம்பாளையம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் தாஹிரா (28) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்மணி, நேற்று காலை 8:15 மணி அளவில் தனது வீட்டில் வழக்கம் போல் வேலைகளைக் கவனித்துக் கொண்டு இருந்ததாகத் தெரிகிறது. அப்போது வீட்டின் பின்புறப் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஏதோ விசித்திரமான சத்தம் கேட்பதைக் கேட்டு, சந்தேகம் அடைந்து பின்புறம் எட்டிப் பார்த்து உள்ளார்.
அங்கு கோவில்மேடு, சாந்தி வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் முருகன் (38) என்ற ஆசாமி ஆடையின்றி பிறந்த மேனியாக நின்று கொண்டு, அந்தப் பெண்ணைப் பார்த்து மிகக் கொடூரமான முறையில் ஆபாச சைகைகள் செய்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து உள்ளார்.
உடனே அந்தப் பெண் கூச்சலிடவே, அவரது கணவர் ஓடி வருவதைப் பார்த்த அந்த ஆசாமி அங்கு இருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடி உள்ளார்.
இதைத் தொடர்ந்து அக்கம், பக்கத்தில் விசாரித்த போது தான், அந்தப் பகுதி மக்களுக்கே பல உண்மைகள் வெளியாகி ஆகியுள்ளன.இந்த ஆசாமி இதேபோல் பல வீடுகளின் முன்பாகவும், காலி இடங்களிலும் நின்று கொண்டு தனியாகச் செல்லும் பெண்களைக் குறி வைத்து ஆபாச சைகைகளில் ஈடுபட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அன்று, இந்த நபரின் அத்துமீறல் குறித்துப் பொதுமக்கள் தரப்பில் “காவல் கட்டுப்பாட்டு அறைக்கு” (100) அவசரத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினமே போலீஸார் இவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டதால், எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
ஆனால், தனது புத்தியை மாற்றிக் கொள்ளாத இந்த ஆசாமி, நேற்று மீண்டும் அதே பகுதியில் சுற்றித் திரிந்து பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால், பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கவுண்டம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசாமியை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் முருகன் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 78, 79 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 (4 of TNPHW Act) ஆகியவற்றின் கீழ் குற்ற எண் 212/2026-படி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

