பொதுவாக நம் வீடுகளில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் உடனே மருத்துவமனைக்கு செல்வதை விட சமையலறையில் வைத்தியத்தை தேடுவது நம்மில் பலருக்கும் வழக்கமாக உள்ள ஒன்றாகிவிட்டது. உண்மையாக, “பாட்டி வைத்தியம்” சில நேரங்களில் கை கொடுத்தாலும், முறையான புரிதல் இல்லாம செஞ்சா அது “வேட்டு வைத்தியம்” ஆகி, நமக்கே வினையா முடிஞ்சிடும்.
அதாவது, பாட்டி வைத்தியம் என்றாலே அது அமிர்தம் என நாம் கண்மூடித்தனமாக நம்புகிறோம். ஆனால், பல நூறு ஆண்டுகளாகவே நம் முன்னோர்கள் பின்பற்றி இன்று வரை நாமும் கைவிடாமல் தொடரும் சில வீட்டு வைத்தியங்கள் உண்மையிலேயே உயிருக்கு உலை வைக்கக் கூடியதாக அமைந்து விடுகிறது. நம்ம பாரம்பரியத்தை மதிக்கணும், அதே சமயம் அறிவியலையும் கொஞ்சம் கவனிச்சு செயல்படுறதுதான் புத்திசாலித்தனம். வளர்ந்து வரும் அறிவியல் உலகில் நம்மை அறியாமலே நாம் செய்யும் அந்த ஐந்து பயங்கரமான செயல்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பற்பசையை தீக்காயங்களுக்கு தடவுவது

சமையல் அறையில் அடிக்கடி ஏதாவது ஒன்று சூடாக தொட்டு விடுவோம். அப்படி சூடான பாத்திரம் பட்டு கை சுட்டுவிட்டால் உடனே நாம் தேடுவது ஃப்ரிட்ஜில் இருக்கும் வெண்ணை அல்லது டூத் பேஸ்ட்தான் இது மிகவும் ஆபத்தான ஒரு பழக்கம் ஆகும். தீக்காயத்தின் மீது இவற்றை தடவுவதால் உள்ளே இருக்கக்கூடிய வெப்பத்தை வெளியேறவிடாமல் தடுத்து தோலின் அடிப்பூரத்தை மேலும் வேகமாக சேதப்படுத்துகிறது. இதனால், காயம் ஆறுவதற்கு பதிலாக பெரிய கொப்பளங்களாக மாறி அதிக வலியை மட்டுமே ஏற்படுத்தும். சாதாரண குளிர்ந்து தண்ணீரை ஊற்றுவதே இதற்கு சிறந்த முதல் உதவியாக கருதப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?.. பலரும் அறியாத உண்மைத் தகவல்கள்..!
விஷம் குடித்த வரை வாந்தி எடுக்க நிர்பந்திப்பது

கெமிக்கல் அல்லது விஷத்தை குடித்து விட்டால் உடனே தொண்டையில் விரலை விட்டு வாந்தி எடுக்க வைப்பது நாம் செய்யும் மிகப்பெரிய தவறாகும். பொதுவாக வாந்தி எடுக்கும் போது அந்த நச்சு ரசாயனம் மீண்டும் உணவு குழாய் மூலம் கடந்து வரும் பொழுது தொண்டையை கடுமையாக எரித்து சேதப்படுத்துகிறது. சில நேரங்களில் அந்த திரவம் தவறுதலாக நுரையீரலுக்குள் சென்று உடனடி மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்த மாதிரி சமயத்தில் கை வைத்தியம் பார்ப்பதை விட மருத்துவரை அணுகுவதை சிறந்தது.
எண்ணெயை காதில் ஊற்றுவது

காது வலி வந்தாலோ அல்லது பூச்சிகள் ஏதாவது காதுக்குள் சென்று விட்டாலோ தேங்காய் எண்ணெய் சுட வைத்து அதில் பூண்டுகளை போட்டு காதில் ஊற்றும் பழக்கம் இன்றும் பலருடைய தொடர்கிறது. இது செவிப்பறையை நிரந்தரமாக கிழித்து விடக்கூடிய ஒரு விபரீதமான செயலாகும். காதுக்குள் ஏற்கனவே புண் அல்லது தொற்று இருந்தால், இந்த எண்ணெய் நேரடியாக அந்த கிருமிகளுக்கு உணவாக மாறி காதில் முழுமையாக சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
ஸ்பிரிட்சை காயங்களில் ஊற்றுவது

கீழே விழுந்து ஏதாவது அடிபட்டாலோ சிராய்ப்பு ஏற்பட்டாலோ உடனே ஸ்பிரிட்ஸ் அல்லது ஹைட்ரஜன் பெராக்ஸைட் ஊற்றி கழுவும் பழக்கம் பல வீடுகளில் இன்றும் இருக்கிறது. அது நுரைத்து வருவதை பார்த்து கிருமிகள் அழிந்து விட்டதாகவே நாம் நினைக்கின்றோம். ஆனால், அது மிகப்பெரிய தவறு. அந்த ரசாயன திரவம் கிருமிகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அடிபட்ட இடத்தை ஆற்ற நினைக்கும் நமது உடலின் நல்ல செல்களையும் சேர்த்து அழித்து விடுகிறது. இதனால், காயம் ஆறுவதற்கு அதிக நாட்கள் ஆவதோடு கொடூரமான தழும்புகளும் ஏற்பட்டு விடும்.
காபி தூளை ரத்தம் வரும் புண்களில் வைப்பது

ஆழமாக வெட்டிக்கொண்டு ரத்தம் கொட்டினால் உடனே காபித்தூள் அல்லது மஞ்சள் மண்ணெண்ணெய் எடுத்து காயத்தின் மீது அழுத்தி வைப்பார்கள். இது ரத்தத்தை நிறுத்துவது போல ஒரு மாயபிம்பத்தை கொடுத்தாலும், இந்த பொருட்களில் உள்ள அழுக்கு மற்றும் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் நேரடியாக ரத்தத்தில் கலந்து மிகப்பெரிய சேதத்தை கொடுத்து விடும் என்பதே நிதர்சனமான உண்மை.
என்னதான் இருந்தாலும், பாரம்பரியமாக எல்லா விஷயங்களும் எப்போதுமே நன்மையை கொடுத்திருந்தாலும், நாம் குருட்டுத்தனமாக நம்ப கூடாது. காலத்திற்கு ஏற்ப அறிவியலின் வளர்ச்சிக்கு நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது மட்டுமே விவேகமான செயலாக கருதப்படுகிறது. பல நேரங்களில் சிறுசிறு பிரச்சனைகளுக்காக நாம் செய்யும் இந்த பாட்டி வைத்தியங்கள் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதை உண்மை.

