தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் பல்வேறு வகையான அரிசிகளின் விலை கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 26 கிலோ கொண்ட ஒரு மூட்டை அரிசியின் விலை அதன் தரத்திற்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.250 வரை அதிகரித்து, சுமார் ரூ.1,550-லிருந்து ரூ.1,800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தின் தாக்கம், போதிய மழையின்மை மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவு காரணமாக நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து போதுமான தண்ணீர் திறக்கப்படாததாலும், மழையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டைக் காட்டிலும் (6.3 லட்சம் ஏக்கர்) மிகக் கடுமையாகக் குறைந்து வெறும் 2.2 லட்சம் ஏக்கராகச் சுருங்கிவிட்டது.
செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!
தமிழகத்தின் தேவைக்குப் போதுமான நெல் உற்பத்தியாகாததால், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கும் விளைச்சல் குறைந்திருப்பதாலும், வெளிமாநில வர்த்தகர்கள் கொள்முதல் செய்வதாலும் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய சாகுபடி வரத்து அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தி சீரடைந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரத்து குறுகி இருப்பதாலும், நடப்புப் பருவத்தில் உற்பத்தி சரிந்துள்ளதாலும் விரைவில் விலை குறைய உடனடி வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்று வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, விலையைக் கட்டுப்படுத்த ஏற்றுமதி தடை, கையிருப்பு உச்சவரம்பு போன்ற உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

