தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அங்கன்வாடி மையம் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்திலிருந்து சிறு குழந்தையின் பெற்றோருக்கு முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த முட்டைகளில் ஒன்றை உடைத்துப் பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் இறந்த கோழிக்குஞ்சு இருந்ததைக் கண்டு பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’.. எஸ்சி, எஸ்டி நிதியில் கைவைப்பா?..
இதுகுறித்து அங்கன்வாடி ஊழியரிடம் கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கன்வாடி மையங்களில் முறையாகப் பராமரிப்புப் பணிகள் செய்யப்படவில்லை எனவும், அடிப்படை வசதிகள் இல்லை எனவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னதாக, பிஞ்சுக் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் உயிரிலும் விளையாடும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்ட சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அங்கன்வாடி மையக் கட்டிடத்தைச் சீரமைப்பதுடன், சுத்தமான குடிநீர் மற்றும் தரமான உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சமூக குழந்தைகள் நலத்துறை அலுவலர் பத்மா சம்மந்தப்பட்ட அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரச்சினைக்குரிய முட்டையின் ஓடுகளைப் பரிசோதித்து, அவை அரசு சார்பில் வழங்கப்பட்டதா அல்லது வெளியே இருந்து வாங்கிப் பயன்படுத்தப்பட்டதா என்பது தெரியவந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்துள்ளார்.

