கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் தாயார் பவித்ரா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், “எனக்கே தெரியாமல் என் குழந்தையின் உடலை வாங்கிச் சென்று, என் சம்மதம் இல்லாமல் எரித்துள்ளனர். உடலை வாங்க என்னை அனுமதிக்கவில்லை.
பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்ததும் எனக்கு தெரியாது. உரிய தண்டனை கிடைத்த பிறகே உடலை வாங்குவேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் கணவரிடம் கையெழுத்து வாங்கி உடலை எடுத்துச் சென்றுள்ளனர். என் குழந்தையின் உடலை என் கண்ணில்கூட காட்டவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
கோவை சிறுமி வழக்கு.. சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்..!
மேலும், “யார் மீது குற்றம் என கண்டுபிடிக்க குழந்தையின் உடல் இல்லை. மருத்துவமனையில் என் கணவரின் மனதை மாற்றி குழந்தையின் உடலை வாங்கிச் சென்றுள்ளனர். உடலை ஒப்படைத்ததில் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை நடந்துள்ளது. உடலை எரிப்பதில் ஏன் அவசரம் காட்டப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.அத்துடன், “என் மீது தேவையற்ற வதந்திகளை பரப்புகின்றனர். வழக்கை திசைதிருப்பவே அவதூறு பரப்பப்படுகிறது.
எனக்கு நிதி வேண்டாம், நீதி வேண்டும்.கொலையாளிக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து இனி யாரும் இதுபோன்ற தவறு செய்யக் கூடாது. என் குழந்தை அனு அனுவாக இறந்துள்ளது; அதேபோல் கொலையாளிகளுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் தங்களிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நேரில் சந்திப்பதாகவும் கூறியதாக பவித்ரா தெரிவித்தார். மேலும், கொலையாளி கார்த்தியுடன் இருந்த பெண்ணுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அந்த பெண்ணிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

