கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழகமே எதிர்பார்க்கும் வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) பெறப்போவதாகத் தெரிவித்தார். திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பதாகவும், ஏப்ரல் 23-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு அதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
திமுக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள கோபம், ஆதங்கம் மற்றும் வெறுப்பு ஆகியவை ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் ‘டபுள் இன்ஜின்’ சர்க்கார் அமைவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்று வலியுறுத்திய அவர், கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை ஏற்கனவே கணித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்.. மதுப்பிரியர்கள் மீது ‘ஆயில்’ தெறித்து தீ விபத்து..!
முன்னதாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல்களில் பாஜக வெற்றி பெறாது என்று கூறப்பட்ட போதிலும், இறுதியில் பாஜகவே வெற்றி பெற்றதை நினைவு கூர்ந்த அவர், இன்னும் இரு தினங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போவதாகக் கூறினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துத் துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஊழல்வாதிகள் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை இது காட்டுவதாகவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் தெரிவித்தார். மேலும், அண்ணாமலைக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “கொடுப்பாங்கண்ணா” என்று பதிலளித்து விட்டு சென்றார்.

