கோவையில் நர்சிங் படித்து விட்டுத் தனது காதலனுடன் வாழ்ந்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தற்போது காப்பகம் ஒன்றில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக வெளியாகி இருக்கும் வீடியோ காட்சிகள் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கிறிஸ் நிந்து (24). பெற்றோர் இல்லாத இவர், கோவையில் உள்ள அபிராமி நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் முடித்து உள்ளார். கல்லூரி படிப்பின் போது, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவருடன் காதல் ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் ‘லிவிங் டு கெதர்’ முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிறிஸ் நிந்து கர்ப்பமானதை அடுத்து, கார்த்திக் அவரைத் திருமணம் செய்ய மறுத்ததாகத் தெரிகிறது. இது குறித்து கார்த்திக்கின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் சமரசமாகப் பேசி முடிப்பதாகக் கூறி மாணவியை அலைக்கழித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தற்செயலா? திட்டமா? – DMK பிரச்சாரத்தில் TVK சிறுவர்கள்..! (வீடியோ)
இருவரும் கோவையில் படித்து வந்ததால், இந்த வழக்கு கோவை காட்டூர் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.மாணவிக்கு ஆதரவாக யாரும் இல்லாததால், அவர் தற்காலிகமாக கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ‘இமயம் ஹோம் சோசியல் வெல்ஃபேர் அசோசியேஷன்’ என்ற காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
ஆனால், அந்தக் காப்பகத்தில் தான் அடைத்து வைக்கப்பட்டுச் சித்ரவதை செய்யப்படுவதாகக் கூறி, அந்தப் பெண் “என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என உரக்கக் கூச்சலிடும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
“தன்னை இங்குப் பூட்டி வைத்து உள்ளனர், வெளியே விட மறுக்கிறார்கள்” என அவர் கதறும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பெற்றோர் இல்லாத ஒரு பெண், காதலனால் ஏமாற்றப்பட்டுத் தற்போது காப்பகத்திலும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக எழுந்து உள்ள இந்தப் புகார் குறித்துக் காவல் துறையினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அந்த இளம்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக முறையான சட்டப் பாதுகாப்பும், மருத்துவ உதவியும் வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

