தமிழ்நாட்டில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் குறித்த மிக முக்கியமான அறிவிப்பை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களும் (காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம்), தாங்கள் உற்பத்தி செய்யும் நிகழ்நேரத் தரவுகளை (Real-time data) மாநில மின் சுமை பகிர்மான மையத்துடன் (SLDC) உடனுக்குடன் பகிர்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகளைப் பகிர்ந்தளிக்காத நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு மின்சாரக் கட்டமைப்பு விதிமுறை – 2026-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, 15 நாட்களுக்குள் தரவுகளை ஒருங்கிணைக்கத் தவறினால், முதற்கட்டமாக அவர்களின் மின் உற்பத்தியில் 10% மின் கணக்கீட்டில் இருந்து கழிக்கப்படும். 30 நாட்களுக்குப் பிறகு முழு மின் உற்பத்தியும் கணக்கீட்டுச் செயல்முறைகளில் இருந்து விலக்கப்படும். 45 நாட்களைக் கடந்தால், மத்திய மின்சார ஆணைய விதிகளின்படி கடுமையான மேல்நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போது மாநிலத்தின் மொத்த மின் தேவையில் 50%-க்கும் அதிகமான பங்களிப்பை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்குகிறது. இந்த மின் உற்பத்தி இயற்கை சூழலைப் பொறுத்து மாறுபடும் தன்மை கொண்டதால், மாநில மின் கட்டமைப்பைப் பாதுகாப்பாகவும், சீராகவும் நிர்வகிக்க இந்த நிகழ்நேரத் தகவல்கள் மிகவும் அவசியம். மாநிலத்தில் 12,000-க்கும் மேற்பட்ட பசுமை மின் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் 10%-க்கும் குறைவானவர்களே தற்போது முறையாகத் தரவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் கட்சிக்கு செல்லப்போவதில்லையா?.. அப்போ ராகவா லாரன்ஸின் அரசியல் என்ட்ரி..!
பலமுறை அறிவுறுத்தியும், 90% உற்பத்தியாளர்கள் தரவுகளைப் பகிராததால் இந்த இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மூலம் மின் தேவை மற்றும் உற்பத்தியைத் துல்லியமாகத் திட்டமிட்டு, நுகர்வோருக்குத் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.

