“மருத்துவர்கள் இல்லை… நர்ஸாக மாறும் தூய்மைப் பணியாளர்கள்” – கேரளாவிற்கு அனுப்ப மறுப்பதாகப் பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பாதையில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி, 9 பேர் உயிரிழந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், அங்கு உள்ள சிகிச்சை குறைபாடுகள் குறித்து வெளியிட்டு உள்ள ஆடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போதிய மருத்துவக் கவனிப்பு இல்லாததால் 19 வயது இளைஞர் நவ்சாத் உயிரிழந்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. கடந்த 17-ஆம் தேதி வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த துயரம் இன்னும் மறையாத நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 19 வயது இளைஞர் நவ்சாத் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது இறப்பிற்குச் சரியான சிகிச்சை அளிக்க ஆள் இல்லாததே காரணம் என அவருடன் சிகிச்சை பெறுபவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
“ஆக்ஸிஜன் அளவு குறைந்த போது கூட அதைக் கவனிக்க மருத்துவர்களோ, செவிலியர்களோ அருகில் இல்லை; இதனால் நவ்சாத் பரிதாபமாக இறந்து விட்டார்”
என அவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்டு உள்ள ஆடியோவில் மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இல்லை. செவிலியர்கள் செய்ய வேண்டிய பணிகளைத் தூய்மைப் பணியாளர்களே செய்யும் அவல நிலை நிலவுகிறது.
“நாங்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள், எங்களை எங்கள் ஊர் மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ சிகிச்சைக்காக மாற்ற அனுமதிக்கவில்லை. அதே சமயம் இங்கும் சரியான சிகிச்சை தரவில்லை”
என அவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். உயிர் பயத்தில் விபத்தில் தப்பியவர்கள்
தங்கள் கண்முன்னே உறவினர்கள் பலியாவதைக் கண்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், தற்போது அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் எஞ்சியிருக்கும் தங்களின் உயிரும் போய்விடுமோ ? என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.
ஏற்கனவே நவ்சாத் பலியான நிலையில், எஞ்சியிருக்கும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு குறித்துப் பெரும் கேள்விக்குறி எழுந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனை, பணியாளர்கள் தட்டுப்பாட்டால் ஒரு இளைஞரின் உயிரைப் பறிகொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

