தேர்தல் காலம் நெருங்கியுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது தனது வித்தியாசமான பிரச்சார முறைகளால் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான நூர் முகமது, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 30 ஆம் தேதி, 49வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சுடுகாட்டிலிருந்து இறுதிச்சடங்கு செய்த மண் சட்டியுடன் பேரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் சட்டியை உடைத்து, தனது வேட்பு மனுவை அதிகாரிகளிடம் தாக்கல் செய்தார்.
“ஓட்டுக்கு பணம் வாங்கினால், இறுதிச்சடங்கு வீட்டிலேயே நடக்கும்” என்ற கருத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவே இந்த மாதிரி செய்ததாக விளக்கம் அளித்தார். மேலும், கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட வேண்டும்; ஆனால் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்கள் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது, கோவை கிணத்துக்கடவு தொகுதியில் 50வது முறையாக போட்டியிட வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சிறுவண்டியில் கயிறு கட்டி இருவர் இழுத்து கொண்டு வந்தனர். நூர் முகமது மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்து, தனது மனுவை தாக்கல் செய்தார்.
மக்கள் பணத்திற்கு அடிமையாகாமல், நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் மொட்டை அடித்து தலையில் மிளகாய் அரைப்பதோடு , நம்மை பிச்சை எடுக்க வைத்துவிடுவார்கள் என்பதை உணர்த்தவே பிச்சைக்கார வேட்மணிந்து வந்ததாக தெரிவித்தார்.
மேலும்,“மக்கள் தான் மிகப்பெரிய அதிகாரம். அவர்கள் மாற்றம் கொண்டுவர முடியும்,” என்று கூறிய அவர், இந்தத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.நூர் முகமது இதற்கு முன்பும் குதிரையில் ‘ராஜா’ வேடத்தில், விவசாயியாக ஏர் கலப்பையுடன், சவப்பெட்டியுடன் உள்ளிட்ட பல்வேறு விதமான முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அலட்சியமா? விபத்தா? 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!
1997ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்று கவுன்சிலராக இருந்த அனுபவமும் அவருக்கு உள்ளது. இதுவரை ஜனாதிபதி முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை 48 முறை போட்டியிட்டுள்ளதாகவும், விழிப்புணர்வுக்காக மட்டும் சுமார் 8 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் , தற்போது தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

