
கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு புகுந்து பெண்ணையும் அவரது தந்தையையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 5 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த பகுதியில் வசிக்கும் முத்து கருப்பு என்பவரின் மனைவி ரிஃபானா (24). கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு, புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஸ்பீக்கர் வாங்க முடிவு செய்த ரிஃபானா, அதற்காக தனது தோழியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சபிக் மற்றும் ரியாஸ் ஆகியோர் அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ரிஃபானா வீடு திரும்பியுள்ளார்.இதனைத் தொடர்ந்து சபிக், ரியாஸ் மற்றும் அவர்களது நண்பர்கள் ஹரி, பாசில், வெற்றி ஆகியோர் ரிஃபானாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றியதில், ஐந்து பேரும் ரிஃபானாவையும் அவரது தந்தையையும் தாக்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில், ரிஃபானாவின் தந்தைக்கு கத்திக்குத்து விழுந்து கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல், ரிஃபானாவை பீர் பாட்டிலால் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ரிஃபானா பெரியகடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சபிக் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

