தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாகத் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கோவை அருகே உள்ள முக்கிய நீர் ஆதாரமான சித்திர சாவடி அணை, தற்போதைய மழைக்காலத்திலும் போதிய நீரின்றி வறண்டு, வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதற்குக் காரணம், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இந்த அணையைத் தூர்வார அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிகையும் எடுக்காததே என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அணையின் பெரும் பகுதி வண்டல் மண்ணாலும், ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகளாலும் மூடிக்கிடப்பதால், நீர்க் கொள்ளளவு முற்றிலுமாகக் குறைந்துபோயுள்ளது.
சித்திர சாவடி அணையை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை மற்றும் காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அணை வறண்டு கிடப்பதால், நடவுப் பணிகளைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும், அணை வறண்டுள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டமும் உயராமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விலைமதிப்பற்ற மழைநீர் வீணாவதைத் தடுக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சித்திர சாவடி அணையைத் தூர்வார வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

