பணியின் நிறுவன தீ விபத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான துணிகள், கட்டிங் மிஷின்கள் முற்றிலும் எரிந்து சேதம். மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.
திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் s.m அப்பேரல்ஸ் என்ற பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிறுவனத்திற்கு பின்புறம் எச்பி பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது, இந்த இடத்தின் உரிமையாளர் ரகுபதி. பனியன் நிறுவனத்தை மட்டும் முத்து லட்சுமணன் என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரக்கூடிய சூழ்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் நிறுவனத்தின் உள்ளே இருந்து கரும்புகை வந்தது, இதனை பார்த்த நிறுவனத்தின் காவலாளி உடனடியாக நிறுவன உரிமையாளருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு உடனே வந்த திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் அவிநாசியை சேர்ந்த தீயணைப்பு துறை வாகனங்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
தீப்பற்றி எரிந்த பனியன் நிறுவனத்திற்கு முன்புறம் பெட்ரோல் பங்க் இருந்த காரணத்தால் தீயை அணைப்பது சற்று சவாலாக இருந்ததாகவும், பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டதாகவும் தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தால் சுமார் 2 கோடி மதிப்பிலான துணிகள் கட்டிங் மிஷின்கள் முற்றிலும் எரிந்து சேதமாய் உள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீ விபத்து நடந்த நிறுவனத்தில் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

