இஸ்ரேல் நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவையில் உள்ள ‘ராயல் டெஸ்டிங் சென்டர்’ (Royal Testing Centre) என்ற நிறுவனத்தின் மூலம் இஸ்ரேல் வேலைக்கான விளம்பரத்தைப் பார்த்து அணுகியுள்ளார்.
கராத்தே பட்டயத் தேர்.. அரசு பள்ளி போட்டிகளில் சாதனை..!
அந்நிறுவனத்தின் உரிமையாளர் தேவா ஆசீர்வாதம் என்பவர், நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தக் கூறியுள்ளார்.பெஞ்சமின் வங்கிக் கணக்கு மூலம் ஒரு லட்சம் ரூபாய் செலுத்திய பிறகு, அவருக்குப் போலி ஆஃபர் லெட்டர் மற்றும் விசா நகல்களை வழங்கியுள்ளனர்.
அதன்பின் வருமான வரிப் பிரச்சனைகளைக் காரணம் காட்டி மீதி இரண்டு லட்சம் ரூபாயைப் ரொக்கமாகப் பெற்றுள்ளனர்.இஸ்ரேல் போர் காரணமாக விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பெஞ்சமின் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் கோவை வந்து பார்த்தபோது, அந்நிறுவனம் மூடப்பட்டு, உரிமையாளர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாகக் கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இதேபோல் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்றும், ஒருவரிடம் 3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்து கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கோவை சி-2 ரேஸ் கோர்ஸ் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

