கருமத்தம்பட்டி அருகே குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட வயிற்று வலியால் மனமுடைந்த வடமாநிலத் தொழிலாளி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் மேதினிபூர் பகுதியைச் சேர்ந்தவர் டோமன் சாரன் (44). கட்டிடத் தொழிலாளியான இவர், தனது மனைவி பன்மணி சாரனுடன் (39) கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணீயூர் செல்லப்பம்பாளையம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறு.. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்..!
அதிக அளவிலான குடிப்பழக்கம் கொண்ட டோமன் சாரனுக்கு, இதனால் கடுமையான வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்ட போதிலும் அவர் மது அருந்துவதைக் கைவிடவில்லை. இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி காலை வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற டோமன் சாரன், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.
நேற்று காலை சங்கோதிபாளையம் அருகே உள்ள புதுக்கிணறு தோட்டம் பகுதியில், காலியிடத்தில் இருந்த ஒரு மரத்தில் டோமன் சாரன் தூக்கில் சடலமாகத் தொங்குவது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

