பரங்கிப்பேட்டை அருகே கடலில் 4 புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
கடலூர் அருகே கடற்பகுதி எல்லைக்குள் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம் – கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இத்திட்டத்தை எந்தவகையிலும் அனுமதிக்கக் கூடாது.
கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் கடற்பகுதி எல்லைக்குள் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துவிட்டதால் அதே இடத்தில் மேலும் நான்கு கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மாநில அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அந்நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!
ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வாழ் உயிரினங்களும், இயற்கை வளங்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது மேலும் 4 கிணறுகளை அதே இடத்தில் அமைக்க முற்படுவது கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமல்லாது கடல் சார்ந்து வாழக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
ஹைட்ரோகார்பன் இருப்பை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் நில அதிர்வுச் சோதனையின் போது எழும்பும் வெடிச் சத்தமும், அதிலிருந்து கசியும் ரசாயனக் கழிவுகளும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அல்லது இறந்து போகும் அபாயம் ஏற்படும் என கடல்சார் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
எனவே, கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முடிவு செய்து தமிழக அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் வழங்கியிருக்கும் விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

