குதிரை வேக அரசு என்று சொன்ன முதல்வர் விஜய், தற்போது குதிரை பேர அரசை நடத்தி வருகிறார். அவரது அரசு ஒரு காலி பெருங்காய டப்பா” என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நள்ளிரவில் குப்பைகளை அள்ள முயன்ற 4 லாரிகள்.. போலீசாரின் நள்ளிரவு நேர விசாரணை..!
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராம சீனிவாசன், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், வருங்காலத்தில் கட்சியின் வெற்றி வாய்ப்புகளை எவ்வாறு பெருக்குவது என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராம சீனிவாசன் பேசியதாவது.குதிரை பேர அரசியல் மற்றும் பாதுகாப்பின்மை தேர்தல் சமயத்தில் ‘குதிரை வேக அரசு’ என்று சொன்ன முதல்வர் விஜய், தற்போது குதிரை பேரம் பேசும் அரசை நடத்தி வருகிறார்.
அதிமுக கட்சியைப் பிளவுபடுத்தி அவர் செய்யும் இந்த நடவடிக்கைகள், அவரது அரசியல் பாதுகாப்பின்மையையே காட்டுகிறது. ‘நம்பர் கேம்’ அரசியல் விளையாடும் அவர், தன் மீதிருக்கும் அதீத நம்பிக்கையால் மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பது விபரீத விளையாட்டாக மாறும். இதற்கு தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும். இந்த குதிரை பேர அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு, காசுக்கு விலை போயுள்ளனர்.
காலி பெருங்காய டப்பா மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்துச் சலுகைகளையும் பாஜக அரசு மக்களுக்குக் கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் எதுவுமே நடைபெறவில்லை. மகளிருக்கு ரூ.2,500 கொடுப்பதாகக் கூறிவிட்டு இதுவரை வழங்கவில்லை. மாநிலத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது விஜய் வாயில் வடை சுட்டு வருகிறார். இவர்களது லட்சணத்தைப் பார்த்தால், இது காலி பெருங்காய டப்பா… இதில் சரக்கு இல்லை, வாசம் மட்டும்தான் உள்ளது என்ற இளையராஜாவின் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், ‘நான் என் வீட்டில் சமைப்பேன், ஆனால் அடுத்த வீட்டில் தான் சாப்பிடுவேன்’ என்பது போன்ற நிலைப்பாட்டையே இவர்கள் எடுத்துள்ளனர். திருமாவளவன் செய்த சாப்பாடு சரியில்லை என்பதால், விஜய் அவரது வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடுகிறார். விசிக தலைவர் திருமாவளவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை ஒரு சந்தர்ப்பவாதியாகவே காட்டிக் கொள்கிறார்.இரண்டு எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டு அவர் பேசும் அரசியல் தலைசுற்றலை ஏற்படுத்துகிறது.
திமுகவுக்கு உண்மையான துரோகிகள் அவர்களின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தான் என்பதை திமுக விரைவில் கற்றுக் கொள்ளும். செய்தியாளர்களைக் கூடச் சந்திக்காத விஜயைப் பத்திரிகையாளர்கள் புகழ்ந்து எழுதுகிறார்கள்.
டப்பா இன்ஜினா? டபுள் இன்ஜினா? முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம் மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து விஜய் என்ன பேசுகிறார் என்பதைப் பொறுத்தே எங்களது கருத்தைத் தெரிவிக்க முடியும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகவை ‘டப்பா என்ஜின்’ என விமர்சித்த விஜய், இப்போது டெல்லிக்கு டப்பா இன்ஜின் அரசாக வருகிறாரா அல்லது டபுள் இன்ஜின் அரசாக வருகிறாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் மோதல் குறித்த கேள்விக்கு வன்முறையை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டும். கலவரம் வெடித்த பின்பு பேசுவதில் பயனில்லை, இதில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

