2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, “இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள்” (IPDS) அமைப்பு மாநிலம் முழுவதும் விரிவான கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. ஜனவரி 26 முதல் மார்ச் 10, 2026 வரை நடைபெற்ற இந்த ஆய்வில், தமிழகத்தின் 38 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 234 தொகுதிகளில் இருந்து மொத்தம் 23,329 வாக்காளர்கள் பங்கேற்று தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் தேர்தல் வியூக நிபுணர் திருநாவுக்கரசு.சி தலைமையிலான குழு இந்த ஆய்வை முன்னெடுத்தது. சமூக மற்றும் கலாச்சார உளவியல் அடிப்படையில் மக்களின் அரசியல் மனநிலையை புரிந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு
ஆய்வில், தற்போதைய அரசின் சில நலத்திட்டங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக காலை உணவுத் திட்டம் 73% பேரால் நல்ல திட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், விடியல் பயணத் திட்டம் 61% பேரின் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் 75% மக்களால் சிறந்த திட்டமாக கருதப்பட்டுள்ளது.

மக்களை பாதிக்கும் முக்கிய சிக்கல்கள்
இதற்கிடையில், சில முக்கிய பிரச்சினைகள் குறித்து மக்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து 72% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேபோல், அரசுத் துறைகளில் லஞ்சம் அதிகரித்து வருவதாக 81% பேர் கூறியுள்ளனர். மேலும், விலைவாசி உயர்வு 69% மக்களை கவலைக்குள்ளாக்கும் பிரச்சினையாக இந்த ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2026 தேர்தல்: கடும் போட்டி எதிர்பார்ப்பு
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி உருவாகும் வாய்ப்பு அதிகம் என இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் அடிப்படையில் பார்க்கும்போது, திமுக 25.3% ஆதரவு, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 24.7%, மற்றும் அதிமுக 22.8% ஆதரவு பெற்று முன்னிலையில் உள்ளதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
கூட்டணி ஆட்சி தான் எதிர்காலம்?
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை மக்கள் மிகவும் கவனமாக மதிப்பீடு செய்து வருவதாகவும், வருங்காலத்தில் கூட்டணி ஆட்சி உருவாகும் வாய்ப்பு அதிகம் என பலர் கருதுவதாகவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும், மாநில அரசியலில் மாற்று அரசியல் சக்திகளுக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகி வருவதை இந்த கருத்துக் கணிப்பு தெளிவாக வெளிப்படுத்துகிறது.

