நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தது பேசுபொருளானது. இதையடுத்து ரவி மோகனும், திருமணத்துக்கு பின் தனக்கு நேர்ந்தது குறித்து விளாவரியாக கூறினார்.
விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வரும் விமர்சனங்களுக்கு நடிகர் ரவி மோகன் தற்போது நேரடியாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், தன்னைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தனது வாழ்க்கையை அமைதியான முறையில் அமைத்துக்கொண்டு முன்னேறி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், பெண்கள் செய்வது அனைத்தும் சரி என்றும், ஆண்கள் மட்டுமே தவறானவர்கள் என்ற பார்வை சமூகத்தில் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஆனால் உண்மையில் பல சந்தர்ப்பங்களில் ஆண்களே பாதிக்கப்படுபவர்கள் என்பதையும், அதனை நமது நீதித்துறையும் ஏற்றுக்கொள்கிறது எனவும் ரவி மோகன் தெரிவித்தார்.
தனது மனநிலையையும், தன்னுடன் நெருக்கமாக உள்ளவர்களுக்காக செய்த செயல்களையும் ஒருநாள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், “ஒரு மனிதனை அமைதியாக வாழ விடுங்கள். உங்கள் கேவலமான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் வழியில் முன்னேறிக்கொண்டே இருப்பேன்” என்று அவர் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த பதிவுடன் ‘வாழ்க்கை என்பது அன்பினில்’ என்ற பாடலை பின்னணியாக வைத்து ஒரு வீடியோவையும் ரவி மோகன் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

