கூட்டணியில் இருந்த ஒரு கட்சியும் தவெகவில் இருந்து விலகியுள்ளது விஜய் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கியிருந்த ஆதரவை ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தவெக கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியே இந்த முடிவுக்கு காரணம் என கட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவிற்கு ஆதரவு வழங்கி வந்த ஜேஎம்எம்கே, கடந்த ஆண்டு முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகியுள்ள கட்சி, எதிர்வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் வாய்ப்பும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜேஎம்எம்கே நிறுவனத் தலைவர் எம்.எஃப். தமீம் கூறுகையில், “கடந்த எட்டு மாதங்களாக தவெகவுடன் இணைந்து பயணித்தோம். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வேண்டுமென கேட்டபோதும் விஜய் செல்லவில்லை. அதனால் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளோம். வரவிருக்கும் தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றிருந்தாலும், தமிழ்நாடு முஸ்லீம் லீக் மற்றும் எம்.ஜி.ஆர். அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்ந்து விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

