தனியார் பிரபல ஆங்கில ஊடகத்தின் சார்பாக விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றார். வழக்கம் போல காரசாரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்த ஹெச் ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
முதலுதவி கொடுத்தும் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த கொதிப்பு மற்றும் முடக்கு வாதம் காரணமாக ஹெச் ராஜா பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்து.
இதையடுத்து ஹெச் ராஜா உடல்நலம் குறித்து நேரிலும், தொலைபேசியிலும் அரசியல் கட்சி தலைவர்கள் விசாரித்து வந்தனர். நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்றார். ஹெச் ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்களை, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், இன்று சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச் ராஜா ஜி அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.

அவர் விரைவாக உடல் நலம் தேறி வருகிறார். மீண்டும் களத்திற்குத் திரும்ப வர வேண்டும் என இறைவனை வேண்டி, எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

