கோவை அருகே புதிதாக திருமணமான பெண்ணிற்கு மதுவில் விஷம் கலந்து கொலை செய்துவிட்டு, சடலத்தை சாக்குப்பையில் மூட்டையாகக் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று நொய்யல் ஆற்றில் வீசிய கணவன் மற்றும் அவனது தந்தை, சித்தப்பா உள்ளிட்ட 3 பேரை கருமத்தம்பட்டி போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள கரணம்பேட்டை, பெருமாகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ஆனந்தகுமார் (27). இவருக்கும் மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. கணவன்-மனைவி இருவருக்குமே மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தந்தை ஆறுமுகம் தனது மகன் ஆனந்தகுமாரை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
இதையடுத்து, ஆனந்தகுமார் தனது மனைவி மகேஸ்வரியுடன் கடந்த 22-ஆம் தேதி, கோவை கரவழி மாதப்பூர் அருகில் வசிக்கும் தனது உறவினரான மற்றொரு ஆனந்தகுமார் (29, மீன்பிடிக்கும் தொழிலாளி) என்பவரது வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அங்கு வந்தும் தம்பதியினர் மது அருந்தியதால், வீட்டின் உரிமையாளரான உறவினர் ஆனந்தகுமாரின் மனைவி அவர்களைக் கண்டித்துள்ளார்.
புதுமணத் தம்பதிகள் என்பதால் அவர்களைச் சமாதானப்படுத்திவிட்டு, வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்துடன் அருகில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மறுநாள் 23-ஆம் தேதி மாலை வீட்டின் உரிமையாளர் ஆனந்தகுமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, உள்ளே மகேஸ்வரி சடலமாகக் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்து அங்கு நின்றிருந்த கணவன் ஆனந்தகுமாரிடம் கேட்டபோது அவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மகேஸ்வரி குடிக்க இரு குவாட்டர் மதுபாட்டில் கேட்டதாகவும், அதனை வாங்கிக் கொடுத்த பிறகும் மீண்டும் ஒரு குவாட்டர் கேட்டதால் ஆத்திரமடைந்து, மதுவில் குருணை மருந்தை (விஷம்) கலந்து கொடுத்து அவரைக் கொலை செய்ததாகக் கூறியுள்ளார். இதனால் பயந்துபோன வீட்டின் உரிமையாளர் ஆனந்தகுமார், குற்றவாளியின் தந்தை ஆறுமுகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அன்று இரவே சம்பவ இடத்திற்கு வந்த தந்தை ஆறுமுகம் (50) மற்றும் அவரது சகலை (சித்தப்பா) சுப்பிரமணி (50) ஆகியோர், சடலத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்கத் திட்டமிட்டனர். வீட்டின் பின்புறமிருந்த வெள்ளை நிற பெரிய பையில் மகேஸ்வரியின் சடலத்தைத் திணித்து மூட்டையாகக் கட்டினர்.
பின்னர், அதனை ஒரு எக்ஸெல் இருசக்கர வாகனத்தின் முன்புறம் வைத்து, சந்தேகம் வராமல் இருக்க அதன் மேல் மீன் வலையைப் போட்டு மூடினர். தொடர்ந்து, சடலத்துடன் ஆனந்தகுமார் இருசக்கர வாகனத்தை ஓட்ட, ஆறுமுகமும் சுப்பிரமணியும் மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதற்கிடையே, பெருமாகவுண்டம்பாளையத்தில் உள்ள உறவினர்களிடம் விசாரித்தபோது, அங்கு மகேஸ்வரியின் சடலம் கொண்டு வரப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் பயந்துபோன வீட்டின் உரிமையாளர் ஆனந்தகுமார், நேற்று (24.06.2026) காலை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் (Inspector) உடனடியாகக் கொலை வழக்கு (Cr.No.256/26 u/s 103(1) BNS) பதிவு செய்து, கரவழி மாதப்பூர் மற்றும் செங்கத்துறை பகுதிகளில் தனிப்படை அமைத்துத் தேடி, முக்கிய எதிரி ஆனந்தகுமாரைக் கைது செய்தனர்.
தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி.. குட்டி யானை டாப்ஸ்லிப் முகாமிற்கு மாற்றம்..!
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், மனைவி மகேஸ்வரியின் உடலை செங்கத்துறை அருகே உள்ள நொய்யல் ஆற்றில் வீசி எறிந்ததை ஒப்புக்கொண்டார். மேலும், இதற்குத் தனது தந்தை ஆறுமுகம் மற்றும் சித்தப்பா சுப்பிரமணி ஆகியோர் உதவியதையும் தெரிவித்தார்.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நொய்யல் ஆற்றிலிருந்து மகேஸ்வரியின் சடலம் மீட்டெடுக்கப்பட்டது. பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு (CMCH) அனுப்பி வைக்கப்பட்டது.
இக்கொலைச் சம்பவத்தில் உடந்தையாக இருந்த தந்தை ஆறுமுகம் மற்றும் சுப்பிரமணி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மூன்று எதிரிகளும் சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் (JM Sulur) முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் (Remand) சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

