சவாய் மாதோபூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலத்தின் உலகப்புகழ் பெற்ற ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் வனவிலங்கு வரலாற்றிலேயே மிக அரிதான ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. பூங்காவின் 9-வது மண்டலத்தில் புலி, சிறுத்தை மற்றும் சீட்டா ஆகிய மூன்று வேட்டையாடும் விலங்குகளும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் காணப்பட்டுள்ளன.
எப்படிச் சாத்தியமானது?
ரந்தம்பூர் காட்டில் புலிகளும், சிறுத்தைகளும் இருப்பது வழக்கம். ஆனால், அங்கு சீட்டாக்கள் கிடையாது. மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவிலிருந்து வெளியேறிய ‘KP-2’ என்றழைக்கப்படும் ஒரு இளம் ஆண் சீட்டா, சுமார் 500 கிலோமீட்டர் தூரம் பயணித்து, சம்பல் நதியைக் கடந்து ரந்தம்பூர் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது.
அரிய காட்சி — ஏப்ரல் 20, 2026
பூங்காவிற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள், ஒரு புலி, ஒரு சிறுத்தை மற்றும் இந்த சீட்டா ஆகிய மூன்றையும் ஒரே நிலப்பரப்பில் மிக நெருக்கமான கால இடைவெளியில் கண்டுள்ளனர். ராஜஸ்தான் வனத்துறை இந்த நிகழ்வை ‘அரிதான மற்றும் நம்ப முடியாத தருணம்’ எனத் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது.
வனத்துறை தீவிர கண்காணிப்பு
குனோ பூங்காவிலிருந்து வந்த ‘KP-2’ சீட்டாவை மீட்க, குனோ மற்றும் ரந்தம்பூர் வனத்துறையினர் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. KP-2 இதற்கு முன்பும் மார்ச் மாதம் ரந்தம்பூர் வரை பயணித்து மீட்கப்பட்ட வரலாறு உண்டு. தற்போது அந்தச் சீட்டா சவாய் மாதோபூர் அருகே உள்ள வயல்வெளியில் தஞ்சமடைந்துள்ளது. மயக்க ஊசி செலுத்திப் பிடித்து மீண்டும் குனோ பூங்காவிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

