கோவை மாவட்டம் சூலூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கூலித் தொழிலாளி ஒருவரை கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தைச் சேர்ந்த சர்தார் என்பவரது மகன் காதர் மொய்தீன் (31). கூலித் தொழிலாளியான இவர், தற்போது கோவை கோவை மாவட்டம் காளப்பட்டி சரஸ்வதி கார்டன் பகுதியில் தங்கி, அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!
நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த காதர் மொய்தீன், அச்சிறுவனுக்கு கிரிக்கெட் பந்து தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு வைத்து அச்சிறுவனுக்கு காதர் மொய்தீன் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
சிறுவன் அதிர்ச்சியடைந்து சத்தம் போட முயன்றபோது, “வெளியே சொன்னால் கொன்று விடுவேன்” என காதர் மொய்தீன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து அச்சிறுவன் பயந்துபோய் தனது பெற்றோரிடம் நடந்த விபரங்களைக் கூறியுள்ளான்.
மகனின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சூலூர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ராமதேவி தலைமையிலான போலீசார், காதர் மொய்தீன் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்ஸோ (POCSO) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.தலைமறைவாக இருந்த காதர் மொய்தீனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

