பால் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்று தங்கத்துடன் திரும்பிய நந்தினிக்கு திருப்பூரில் பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பூர் வாரணாசி பாளையம் குருவாயூரப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த நந்தினி 21 என்பவர் பால் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்காக தேர்வாகி மலேசியாவில் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கி 4ம் தேதி வரை நடைபெற்ற தெற்காசிய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தங்க பதக்கத்துடன் திரும்பி உள்ளார்.
நந்தினியின் தந்தை லோகநாதன் திருப்பூரில் சிறிய அளவில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் பால் பாட்மிண்டன் போட்டியின் தமிழ்நாடு வீரராக 25 ஆண்டுகளாக பங்கேற்று பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்.
எனவே தனது மகளையும் பால் பேட்மின்டனில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என 14 வயது முதல் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். அதன் காரணமாக சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திய நந்தினி இந்நிய அணிக்கு தேர்வானதுடன் 5 பேர் கலந்து ஆடும் போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கத்துடன் நாடு திரும்பி உள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நந்தினி மற்றும் அவரது பெற்றோருக்கு சால்வை அணிவித்து தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

