கோவை தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளர்கள், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளாக 23 கெளரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பதுடன், யூ.ஜி.சி. நிர்ணயித்த ரூ.57,800 ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அண்டை மாநிலங்களில் வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும், பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும், பி.எப்., ஈ.எஸ்.ஐ./ஈ.சி.எஸ். பிடித்தம் நடைமுறைப்படுத்த வேண்டும், ஆண்டின் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வரும் இவர்களின் நடவடிக்கை கல்வி வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

