கோவை இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட அத்தப்பகவுண்டன்புதூர் பகுதியில் வாக்குச்சாவடி எண்கள் 168 மற்றும் 169 செயல்பட்டு வருகின்றன. நேற்று காலை முதல் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த சிலர் மது போதையில் தங்களது கட்சிக் கொடியுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் அதிரடியாக நுழைய முயன்றுள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி தவெக கொடியுடன் உள்ளே நுழைய முயன்றவர்களை, அங்கிருந்த பூத் ஏஜென்ட் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை கும்பல், ஏஜென்ட்டையும் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!
இதில், காயமடைந்தவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்துத் தகவல் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, அத்தப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சம்பவ இடத்தில் திரண்டனர். வாக்குச்சாவடி மையத்தில் அத்துமீறி நுழைந்து அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களைக் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில், அந்த வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என்று வாக்குச்சாவடி மையத்தின் வீட்டின் முன் ஏராளமான பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

