தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசாங்கம் தனது முதல் முழுமையான பட்ஜெட்டை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்பட்டது.
இதில் மாநிலத்தின் கடன் சுமை மற்றும் வருவாய் பற்றாக்குறை (சுமார் ரூ.78,000 கோடிக்கும் மேல்) குறித்த கவலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதனால், தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில் நிதி நெருக்கடி ஒரு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
தவெக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளைப் படிப்படியாகச் செயல்படுத்துவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்படும். குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்குதல், அரசுப் பள்ளி மற்றும் மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவை முக்கிய இடம் பெறலாம்.
அரசு அலுவலகங்களில் லஞ்சமா?.. தமிழக அரசின் புதிய வாட்ஸ்அப் புகார் எண் இதோ..!
தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம். காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துதல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை விரிவாக்குதல் போன்றவை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஜூலை 2 முதல் ஜூலை 22 வரை, முதலமைச்சர் விஜய் துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள் பட்ஜெட்டின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட வடிவமைப்புக்கு முக்கிய அடித்தளமாக அமைகின்றன. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், மக்கள் நலன் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்த முதல் பட்ஜெட் அமையும் எனப் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

