நாங்குநேரி பகுதியில் இரட்டை கொலை நடந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
வடமாநில தொழிலாளி உட்பட இரண்டு பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் விரைவாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் ஏற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

