புது தில்லி / மாஸ்கோ:
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான ராணுவ உறவில் ஒரு புதிய யுகம் தொடங்கியுள்ளது. இரு நாடுகளும் தங்களது ராணுவத் தளங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வெளி உள்கட்டமைப்புகளைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கான ‘RELOS’ (Reciprocal Exchange of Logistics Agreement) ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
RELOS ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
கடந்த 2025 பிப்ரவரி மாதம் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா மற்றும் ரஷ்யா பின்வரும் வசதிகளைப் பகிர்ந்து கொள்ள சம்மதித்துள்ளன:
ராணுவ வீரர்கள்: தலா 3,000 வீரர்கள் வரை ஒரு நாட்டின் நிலப்பரப்பில் (பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுக்காக) நிலைநிறுத்தப்படலாம்.
போர்க்கப்பல்கள்: தலா 5 போர்க்கப்பல்கள் வரை ஒரு நாட்டின் துறைமுகங்களைப் பயன்படுத்தலாம்.
விமானங்கள்: தலா 10 போர் விமானங்கள் வரை ஒரு நாட்டின் விமான நிலையங்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு.
கால அளவு: இந்த ஒப்பந்தம் முதல் 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும், பின்னர் இரு நாடுகளின் சம்மதத்துடன் நீட்டிக்கப்படலாம்.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் இந்தியாவின் புதிய பலம்:
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வியூக எல்லையை ஆர்க்டிக் பிராந்தியம் வரை விரிவுபடுத்துகிறது. ரஷ்யாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முர்மான்ஸ்க் மற்றும் செவெரோமோர்ஸ்க் துறைமுகங்களை இந்தியா இனி பயன்படுத்த முடியும். இது சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் ஆர்க்டிக் கடல் பகுதியில் இந்தியாவின் இருப்பை உறுதிப்படுத்தும்.
இந்தியப் பெருங்கடலில் ரஷ்யாவின் தேவை:
அதேபோல், குளிர்காலத்தில் ரஷ்யாவின் துறைமுகங்கள் உறையும்போது, இந்தியாவின் வெப்பமண்டலத் துறைமுகங்களை ரஷ்யா பயன்படுத்திக்கொள்ளலாம். அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் ஆதிக்கத்திற்குப் போட்டியாக, இந்தியப் பெருங்கடலில் ரஷ்யாவிற்குத் தேவையான எரிபொருள், பழுதுபார்ப்பு மற்றும் தளவாட உதவிகளை இந்தியக் கடற்படை வழங்கும்.
பணமில்லா வர்த்தகம் மற்றும் மல்டி-அலைன்மென்ட்:
அமெரிக்காவுடன் இந்தியா கொண்டுள்ள LEMOA ஒப்பந்தத்தை விட RELOS சற்று மாறுபட்டது. இதில் வீரர்களை நிலைநிறுத்த அனுமதி உண்டு என்பது கூடுதல் சிறப்பு. மேலும், சேவைகளுக்கான கட்டணத்தைச் செலுத்தாமல் ‘பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும்’ (deferred financial settlement)) முறையையும் இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.
ரஷ்யா இப்போதும் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக நீடிக்கிறது. இந்தச் சூழலில், பிரதமர் மோடி மற்றும் அதிபர் புடின் ஆகியோரின் முயற்சியால் உருவான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் ராணுவப் பிணைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

