கோவை மாவட்டம் சூலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டல் தொழிலாளி ஒருவர் கொடூரமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த திலீபன் (37) என்பவர், சூலூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், சூலூர் ஸ்ரீ சின்னையன் நகர் பகுதியைச் சேர்ந்த அன்பு எஸ்தர் (37) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.
இன்று அதிகாலை அன்பு எஸ்தரின் வீட்டிற்கு திலீபன் வந்திருந்தபோது, அங்கு வந்த பிரேமானந்த் (54) என்பவர் ஆத்திரமடைந்து திலீபனை தான் வைத்திருந்த கத்தியால் உடல் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் திலீபன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற அன்பு எஸ்தருக்கும் இடுப்பு பகுதியில் பலத்த கத்திக்குத்து விழுந்தது.
கொலை செய்த பின்னர், பிரேமானந்த் வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டரைத் திறந்துவிட்டு வீட்டை வெடிக்கச் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதில் ஏற்பட்ட தீ விபத்தில் பிரேமானந்தின் இரண்டு கைகளிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த சூலூர் காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று காயமடைந்த அன்பு எஸ்தரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தீக்காயமடைந்த எதிரி பிரேமானந்தையும் காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்த திலீபனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

