தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வரும் நிலையில், எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஆளப்போகும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடித்துள்ள திரைப்படம் எப்போது வெளியாகும் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
அந்த திரைப்படத்திற்கு ஏதேனும் தடைகள் ஏற்படுத்தப்படுமானால், அதனால் அப்படிச் செய்பவர்களுக்கு எந்தவிதமான வலுவும் சேராது என்றும், இத்தகைய சூழ்நிலை எங்கு ஏற்பட்டாலும் அது வேதனைக்குரியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நாளை முதலமைச்சராக ஆகப் போகும் ஒருவரின் திரைப்படத்தைத் தடுக்க முயற்சிப்பது சரியான செயல் அல்ல என்றும் அவர் விமர்சித்தார்.

இதுபோன்ற விஷயங்களை யார் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், கட்சி சார்பில் இதுவரை வழக்கு உள்ளிட்ட எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் செங்கோட்டையன் விளக்கினார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் பெரியார் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக உள்ளார் என்றும், பெரியார் குறித்து பிறர் பேசுவதற்கு கருத்து சொல்ல ஒன்றும் இல்லை; அதற்கான பதிலை மக்களே வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.
பாஜக–அதிமுக கூட்டணி தொடர்பான விவரங்களை அந்தக் கட்சிகளிடமே கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்து பேசிய செங்கோட்டையன், மாணவர்களுக்கு மடிக்கணினிகள் முன்கூட்டியே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், குழந்தை வளர்ந்த பிறகு அல்லாது, வளரும்போதே பாலூட்ட வேண்டும் என்ற உவமையுடன் அவர் கருத்து தெரிவித்தார்.

